சென்னை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - பீதி
சென்னை: சென்னை பரங்கிமலை அருகே உள்ள பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. ஆனால் இது வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.
பரங்கிமலை அருகே உள்ளது புழுதிவாக்கம். இங்குள்ள செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு இன்று காலை இரு தொலைபேசி அழைப்புகள் வந்தன.
எட்டரை மணிக்கு இந்த தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஒன்று லேன்ட்லைனிலிருந்தும், இன்னொன்று மொபைல் போனிலிருந்தும் வந்தன.
பள்ளிக் கூடத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் எனவும் அந்த போனில் பேசியவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து மோப்ப நாய்கள் சகிதம் போலீஸார் விரைந்து வந்தனர். வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் நிபுணர்களும் விரைந்து வந்தனர். பள்ளி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
வகுப்பறைகளில் அப்போது பாடம் நடந்து கொண்டிருந்தது. இருப்பினும் வகுப்புகளுக்கு இடையூறு இல்லாமல் சோதனை நடந்தது. பள்ளியும் மூடப்படவில்லை.
இதையடுத்து புரளியைக் கிளப்பியது யார் என்று போலீஸார் விசாரித்தபோது நங்கநல்லூரைச் சேர்ந்த ஜான் (43), துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பிஜூ (37) ஆகிய இருவர் சிக்கினர். அவர்கள்தான் போன் செய்ததாக தெரிகிறது. அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.