உத்தப்புரத்தில் தொடர்ந்து பதட்டம் - ஊரே காலி - 30 பேர் கைது
மதுரை: மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. ஜாதிக் கலவரம் காரணமாக இதுவரை 520 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தப்புரம் கிராமத்தில் உள்ள தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை இடித்தும் கூட அங்கு ஜாதிப் பிரச்சினை தீரவில்லை. இரு தரப்பும் அவ்வப்போது மோதிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் தலித் சமூகத்தினர் திருமண விழாவையொட்டி பட்டாசு போட்டதைத் தொடர்ந்து மோதல் மூண்டு பின்னர் அமைதி ஏற்பட்டது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோவில் சீரமைப்புப் பணி தொடங்கியது. கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து சுற்றுச் சுவரில் வர்ணம் பூசும் பணி நடந்து வந்தது. அப்போது ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள், வர்ணம் பூச எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கியும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பத்து பேர் படுகாயமடைந்தனர். கலவரத்ைத அடக்க வந்த போலீஸாரும் இதில் காயமடைந்தனர். போலீஸ் ஜீப் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 520 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 110 பெண்கள் உள்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் 30 ஆண்களைத் தவிர மற்ற பெண்களை போலீஸார் விடுவித்தனர்.
இந்த நிலையில் உத்தபுரம் ஊர் மக்கள் கிராமத்தை காலி செய்து விட்டு சென்று விட்டனர். போலீஸார் கைது செய்யக் கூடும் என்ற அச்சத்தால் அவர்கள் கிராமத்தை விட்டு சென்றுள்ளனர். இதனால் ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது. பெருமளவிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications