தமிழர்கள் சாக துணை போகும் இந்திய அரசு: வைகோ

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி சிபிஐ நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:
ஐநாவின் மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் லூயிஸ் ஹார்பர் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்ல அந்நாட்டு அரசு அனுமதி மறுத்தது. கொழும்புவில் ஐநா அலுவலகம் திறக்க கடந்த ஓராண்டாக அனுமதி கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.
தமிழர்கள் வாழும் பகுதியில் இருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் அந்நாட்டு அரசு வெளியேற்றிவிட்டது. இந்த நடவடிக்கைககள் இலங்கை அரசின் இனபடுகொலையில் ஈடுபடுகிறது என்பதற்கான சாட்சிகள்.
இலங்கையில் தமிழர்களை குண்டு வீசி கொன்று குவிக்கும் ராஜபக்சே அரசின் இனபடுகொலைக்கு மத்திய அரசு உதவி வருகிறது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணன், சிவசங்கர் மேனன் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு சென்று அந்நாட்டு அரசுடன் பேசுகிறார்கள்.
ராணுவ ரீதியான உதவிகளை செய்வதாகவும் பேட்டி அளிக்கின்றனர். புலிகளுடன் நடந்த போரின்போது ராடர் தளத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய இன்ஜினீயர்கள் மூலம் மத்திய அரசின் உதவிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உணவும் மருந்தும் கிடைக்காமல் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு இந்திய அரசு துணைபோகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுவேன். உணவையும் மருந்தையும் அனுப்ப மத்திய அரசு மறுப்பதற்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம்.
இலங்கை பிரச்சனையில் தற்போதைய நிலை என்ன என்பதை கருணாநிதி விளக்க வேண்டும். இந்திய-இலங்கை கூட்டு ராணுவ ஒப்பந்தம் வராவிடாமல் இடதுசாரிகள்தான் தடுத்தார்கள். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications