மின்வாரிய ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு
சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் கருணை தொகை வழங்கப்படும்.
ஆண்டுதோறும் போக்குவரத்துத்து துறை, பால் வளத்துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது.
இதில் 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம் கருணைத் தொகையும் அடக்கம். இந்நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வரின் ஆணைப்படி, தமிழக மின்சார வாரிய ஊழியர்களுக்கு 2007-08ம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவது குறித்து எரிசக்தித் துறை செயலாளர், மின்வாரிய தலைவர், மேலாண்மை இயக்குனர், அதிகாரிகள், அனைத்து தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மின் வாரியத்தின் தற்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, 8.33 சதவீதம் போனஸூம், 11.67 சதவீதம் கருணைத் தொகையும் வழங்கப்படும். இதன் மூலம் 69,556 பணியாளர்கள் பயனடைவார்கள். மேலும் 2007-08ம் ஆண்டில் மின் வாரியத்தில் பணியாற்றிய 14,760 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் 5,627 பகுதி நேர ஊழியர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் கருணை தொகையும் வழங்கப்படும். இதனால் மின்வாரியத்துக்கு இந்தாண்டு ரூ.60.47 கோடி செலவாகும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications