மெட்டுக்கேற்ப பாடல் எழுதுவது ரொம்ப கஷ்டம்: வைரமுத்து

பிரபல திரை திறனாய்வாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் கவிஞர்களின் திரை இசைப் பாடல்கள் என்ற நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மெட்டுக்கேற்ப பாடல் எழுதுவது என்பது கடினமானது. மெட்டுக்கேற்ப பாடல் எழுதுவதற்கு அளவுகோல் உள்ளது. உங்களுக்காக காத்திருக்கும் மெட்டுக்குள் பொருந்தும் வகையில் நீங்கள் வரிகளைப் போட வேண்டும். அதை எழுதிப் பாருங்கள், அப்போதுதான் அதன் சிரமம் உங்களுக்குப் புரியும்.
கிழக்குச் சீமையிலே படத்தில் நான் எழுதிய கத்தாழங்காட்டு வழி பாடல் அப்படி சிரமப்பட்டு பிரசவித்ததுதான். இப்படி மெட்டுக்கு பாட்டு எழுதும்போது உங்களது உணர்வுகளை முழுமையாக உங்களால் வெளிப்படுத்த முடியாது.
ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும்போதுதான் அந்தப் பாடல் முழுமை அடையும். அதன் அர்த்தமும் விளங்கும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது.
கத்தாழங்காட்டு வழி பாடலுக்காக நான் 3 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் பாடலுக்கான மெட்டு என்னிடம் வந்தபோது விஜயகுமாரும், நெப்போலியனும் மட்டுமே எனது மனதில் தோன்றினார்கள். அவர்களது முரட்டு மீசைகள்தான் எனது மனதில் மின்னின. அவற்றையும் எனது பாடலில் பதிவு செய்தேன்.
ஆனால் இப்படி கஷ்டப்பட்டு பாடல்களைப் புனையும்போது, ரசிகர்களிடமிருந்து நமக்கு பாராட்டுக்களும், கைத்தட்டல்களும் கிடைக்கும்போது அந்த வலி பறந்து போய் விடும்.
கவிஞர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல திரைப்படப் பாடலாசிரியர்கள். அவர்களை கவிஞர்களின் ஏழை சகோதரர்களாக யாரும் நினைத்து விடக் கூடாது என்றார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications