ஒன்றரை வயதுக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன்
கபூர்தலா: பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் ஒன்றரை வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது. சுடுகாட்டில் போடப்பட்ட குழந்தையை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் குழந்தை அது. கபூர்தலாவின் வட்டச்சாலை பகுதியில் குடிசை போட்டு அந்தத் தொழிலாளி தனது குழந்தை மற்றும் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை அடையாளம் தெரியாத ஒரு நபர் அங்கு வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு மறைவிடத்திற்குச் சென்று இந்த கொடூரச் செயலை செய்துள்ளான். பின்னர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் குழந்தையைப் போட்டு விட்டு போயுள்ளான்.
குழந்தையைக் காணாமல் தேடிய தந்தை, சுடுகாட்டில் ரத்தக் களறியாக தனது குழந்தை கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போய் குழந்தையை மீட்டார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்து விட்டு மருத்துவமனைக்கு குழந்தையுடன் விரைந்தார். குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக சிதைத்த கொடூரனை போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள்.