காந்தமாலில் தொடரும் வன்முறை - பெண் கற்பழிப்பு
புவனேஸ்வர்: ஒரிசாவில் மதக் கலவரம் தாண்டவமாடி வரும் காந்தமால் மாவட்டத்தில் கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட பரபரப்பு நீங்குவதற்குள் இன்னொரு கற்பழிப்புச் சம்பவம் நடந்துள்ளது பதட்டத்தைக் கூட்டியுள்ளது.
ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையும், தாக்குதலும் சற்றும் ஓயவில்லை. மத்திய போலீஸ் பெருமளவில் குவிக்கப்பட்டும் கூட கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்னொரு பெண்ணும் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் செப்டம்பர் 19ம் தேதி தன்னை ஐந்து பேர் கொண்ட கும்பல் கற்பழித்ததாக நேற்று போலீஸில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் மனோஜ் பிரதான் என்பவரைக் கைது செய்துள்ளனர். நான்கு பேரை தேடி வருகின்றனர்.
தனது தாத்தாவுடன் வீட்டில் இருந்த போது இந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து தன்னை வெளியே இழுத்துச் சென்றதாக அவர் புகார் கூறியுள்ளார்.
இதற்கிடையே காந்தமால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்கள், வீடுகள், சர்ச் எரிப்புகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஒரிசா மாநில அரசு திகைத்துப் போய் நிற்கிறது.