கிளிநொச்சியை எந்த நேரத்திலும் மீட்போம்: பொன்சேகா
அனுராதபுரா நகரில் வருடாந்திர ராணுவ கொடி மரியாதை நிகழ்ச்சி நேற்று நடந்தது. 10ம் தேதி ராணுவ தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் பொன்சேகா கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கிளிநொச்சியில் உள்ள ஓடிசுடன், விஸ்வமடு ஆகிய பகுதிகளை ராணுவம் தன் வசப்படுத்தியுள்ளது. அங்கு தனது நிலையை ஸ்திரப்படுத்திய பின்னர் போரற்ற பகுதிகளாக அவை அறிவிக்கப்படும்.
தற்போது கிளிநொச்சி நகருக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் ராணுவம் நிலை கொண்டுள்ளது. விரைவில் கிளிநொச்சி நகரை கைப்பற்றுவோம் என்றார் பொன்சேகா.
புலிகளின் முக்கிய தலமாக விளங்கும் கிளிநொச்சியை பிடிக்கும் நோக்கில் இலங்கையின் முப்படைளும் தீவிர தாக்குலில் ஈடுபட்டுள்ளன. விமானப்படை விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகின்றனர். இதில் ஏற்படும் உயிர்ச்சேதம் குறித்த உண்மை தகவல்கள் வெளியாகவில்லை.
அதேபோல ராணுவமும் தரை ரீதியாக தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே விடுதலைப் புலிகளின் போலீஸ், அரசியல் மற்றும் அமைதிப் பிரிவு தலைமையகங்களை விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்கி அழித்துள்ளன என்பது நினைவிருக்கலாம்.
விமானப்படை விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவதால், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். போர் இல்லாத பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் வழியாக அவர்கள் வெளியேறி வருகின்றனர்.
வவுனியாவைச் சுற்றிலும் ராணுவம் கடும் போர் புரிந்து வருகிறது. விமானப்படை விமானங்களும் தொடர்ந்து புலிகளின் நிலைகள் மீது குண்டு வீசித் தாக்கி வருகின்றன.
கிளிநொச்சியைப் பிடிப்பது ராணுவத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கிளிநொச்சி வீழ்ந்து விட்டால், மட்டக்களப்பில் மட்டுமே விடுதலைப் புலிகள் செயல்படும் நிலை உருவாகும். அல்லது கொரில்லா போர் முறையை மட்டுமே அவர்கள் நம்பியிருக்கும் நிலையும் ஏற்படும்.
கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை ராணுவம் இந்த ஆண்டு தொடக்கத்தில் முறித்துக் கொண்டது. பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தியது. அது முதலே விடுதலைப் புலிகளின் பல முக்கிய பகுதிகளை ராணுவம் தொடர்ந்து கையகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சுப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல முக்கிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களை அந்த இயக்கம் இழந்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் 7000 விடுதலைப் புலி வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், 700 ராணுவ வீரர்கள் தங்களது தரப்பில் உயிரிழந்ததாக இலங்கை அரசு தெரிவிக்கிறது.