ஈழத் தமிழர் பிரச்சனை - பிரதமருக்கு தந்திகளை குவிக்கும் திமுகவினர்
இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிடக்கோரி பிரதமருக்கு தந்திகள் அனுப்பி வைக்குமாறு திமுகவினருக்கும், பொதுமக்களுக்கும் முதல்வர் கருணாநிதி நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுநல அமைப்பினரும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
இதையடுத்து நேற்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து திமுகவினரும், பாமகவினரும், பிற கட்சியினரும் தந்திகளை அனுப்ப தொடங்கியுள்ளனர்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பிரதமருக்கு தந்திகளை அனுப்பி வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பிரதமருக்கு தந்திகளை அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம் மாவட்ட திமுக துணை செயலாளரும், கண்டமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.புஷ்பராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தந்தி அலுவலகத்திற்கு சென்று தந்தி கொடுத்தனர்.
ஒரே நேரத்தில் பலர் தந்தி கொடுக்க வந்ததால் தந்தி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் நகர திமுக இளைஞரணி சார்பில் அதன் அமைப்பாளர் பழக்கடை ராஜா தலைமையில் 200 பேர் இன்று பிரதமருக்கு தந்தி அனுப்பினார்கள்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்றே விழுப்புரத்தில் உள்ள தொலைபேசி அலுவலகத்திற்கு சென்று தந்தி அனுப்பினார். அமைச்சரை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் திமுகவினர் நேற்று மாலையில் இருந்தே தந்திகள் கொடுக்க தொடங்கிவிட்டனர்.
புதுச்சேரியில் ...
புதுச்சேரியிலும் தந்தி கொடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மாநில திமுக ஒருங்கிணைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் தலைமையில் 3000 பேர் இன்று பிரதமருக்கு தந்திகளை அனுப்பி வைத்தனர்.