அஸ்ஸாமில் தொடர்ந்து வன்முறை - இதுவரை 41 பேர் பலி
உடால்குரி (அஸ்ஸாம்): அஸ்ஸாம் மாநிலம் உடால்குரி மற்றும் தராங் மாவட்டங்களில் தொடர்ந்து போடா பழங்குடியினருக்கும், வங்கதேசத்தவர்களுக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது. இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்கதேசத்திலிருந்து வந்து தங்கியுள்ளவர்களுக்கும், போடோ பழங்குடியின மக்களுக்கும் இடையே 3 நாட்களுக்கு முன்பு வன்முறை மூண்டது. வங்கதேசத்தவரால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி போடோ இனத்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர்.
உடால்குரி, தராங் ஆகிய மாவட்டங்களில் வன்முறை பெரிய அளவில் உள்ளது. இதையடுத்து அங்கு ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு, கலவரம் ஆகியவற்றில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை கச்சுபில் என்ற இடத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவ கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.
வன்முறை பாதித்த பகுதிகளில் கூடுதல் உஷார் நிலையுடன் இருக்குமாறு ராணுவத்தினரையும், புற ராணுவப் படையினரையும் முதல்வர் தருண் கோகாய் கேட்டுக் கொண்டுள்ளார்.
அனைத்துப் பிரிவினரும் அமைதி காக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.