ஊனமுற்றோர் நலன்: சுயவிளம்பரம் தேடும் விஜயகாந்த் - அமைச்சர்
சென்னை: ஊனமுற்றவர்கள் நலனில் தான் ஒருவர் மட்டும்தான் அக்கறையோடு இருப்பதுபோல சுய விளம்பர நோக்கத்தில் விஜயகாந்த் பேசியிருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
தேமுதிக சார்பில் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் கணினி வேலைவாய்ப்பு பயிற்சியை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது, என்னைப் பார்த்து போட்டிபோடும் மற்ற கட்சிகள் இதுபோன்ற உதவிகளை செய்வதிலும் போட்டி போட வேண்டியது தானே. நான் ஒரு கோடி ரூபாய்க்கு திட்டமிட்டால், அவர்கள் 10 கோடிக்கு திட்டமிடலாமே என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதி ஊனமுற்றவர்களின் நலனுக்காக செய்துள்ள பல்வேறு திட்டங்களையும், அவர் தனது சொந்த பணத்தில் செய்துள்ள பல்வேறு உதவிகளையும் பட்டியலிட விரும்புகிறேன்.
2005ம் ஆண்டில் மண்ணின் மைந்தன் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் ரூ.11 லட்சம், கண்ணம்மா படத்தின் மூலம் கிடைத்த ரூ.10 லட்சம் ஆக 21 லட்ச ரூபாயை சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் ஸ்டாலின் மூலம் வழங்கியவர் கருணாநிதி.
ஊனமுற்றவர்களின் நலம் பேண கருணாநிதியும், திமுக அரசும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.
விஜயகாந்த் சுய விளம்பர நோக்கத்தோடு ஏதோ தான் ஒருவர் மட்டும் தான் ஊனமுற்றோருக்கு உழைத்திட அவதாரம் எடுத்துள்ளதைப் போலவும், தனது சொந்த பணத்தை மற்றவர்களுக்கு செலவு செய்ய முன்வந்திருப்பதை போலவும் பேசுவதும்; செய்தி வெளியிடுவதும் ஊனமுற்றோருக்கு செய்யும் உண்மையான சேவையாகாது என்று கூறியுள்ளார்.