தனிக் கட்சி: கோவை ரஜினி ரசிகர்கள் புதிய நெருக்கடி!
தமிழகம் முழுவதிலும் உள்ள ரஜினியின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்று கோரிக்கை விடுத்தும் போஸ்டர்கள் ஒட்டியும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, குசேலன் தோல்விக்குப் பிறகு பலரும் ரஜினியின் செல்வாக்கு சரிந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்த்த் தருணத்தில் தங்கள் தலைவர் அரசியலுக்கு வந்து தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
ஆனால் ரஜினியோ இந்த நிமிடம் வரை தனது முடிவு குறித்து தெரிவிக்கவில்லை.
'தலைவர் ரஜினி இம்முறை கட்சி ஆரம்பிப்பார் என்று பொறுமையாகக் காத்திருந்தோம். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால் நாங்களே கட்சி ஆரம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
ரசிகர் மன்றத்துக்கு உழைத்த உழைப்பை கட்சிக்கு உழைத்திருந்தால், எங்களது நிலை எப்படியோ இருந்திருக்கும். கட்சி துவங்குவதற்கு ரஜினியிடமிருந்து அனுமதி வாங்கவில்லை. இனிமேல் கோவை மாவட்டத்தில் யாரும் ரஜினி மன்றத்திற்காக செயல்படப் போவதில்லை. புதிய கட்சி துவங்குவதற்கு முன் மாவட்டத்திலுள்ள அனைத்து மன்ற நிர்வாகிகளிடமும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்கு குறித்து முடிவெடுக்காவிட்டால் மாநிலம் முழுவதுமுள்ள ரசிகர்களை கூட்டி முடிவெடுக்கப்படும்..' என்று தெரிவித்துள்ளார் கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் துணைச் செயலாளர் அபு மற்றும் மதுக்கரை ஒன்றாவது வார்டு கவுன்சிலர் ரஜினிபாபு. இந்த இருவரும் சில ஆண்டுகளாக ரஜினி மன்றத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவப்பு, வெள்ளை, கறுப்பு என 3 நிறங்களைக் கொண்டுள்ள கொடியில் நடுவில் நீல நிறத்தில் நட்சத்திரம் அதன் நடுவே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் உருவம் பொரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு மாவட்ட செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் அபு ஆகியோர் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவார் என காத்திருந்து ஏமாந்துவிட்டோம். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தோர் புதிய கட்சிகளுக்கு சென்றுவிட்டனர். எனவே நாங்களாகவே புதிய கட்சியை தொடங்கி விட்டோம்.
அடுத்த வாரத்தில் தலைவர் எங்களை சந்திக்கும்போது கட்சித் தொடங்குவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிடும்படி வலியுறுத்துவோம். மறுத்தால் அனைத்து மாவட்ட ரசிகர்களும் ஒன்றுகூடி தொடர் உண்ணாவிரத நடத்துவோம் என்று கூறியுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில், உடனடியாக நடிப்பை விட்டு விட்டு அரசியலில் தீவிரமாக ரஜினி ஈடுபட வேண்டும் என்று கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கடந்த வாரமே சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் என்ற பெயரையொட்டி, ரஜினி ராஜ்ஜியம் என்ற பெயரில் ரஜினி ரசிகர்கள் கோவை முழுவதும் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து விசாரித்த போது, கருத்துக் கூற மறுத்துவிடாடர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் க.சத்தியநாராயணா.
கோவா ஷூட்டிங் முடிந்ததும் தனது ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினி இந்த விஷயத்தில் தனது முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ரபோடும், தமிழகம் முழுக்க இன்னும் பரபரப்பான அரசியல் போஸ்டர்களை அடித்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
கோவையிலிருந்து கிளம்பியுள்ள இந்த புதிய புயல், தமிழகம் முழுவதையும் கலக்கி, போயஸ் தோட்டத்தில் (ரஜினி வீடு அங்குதான் உள்ளது) கரையைக் கடக்குமா அல்லது கோவையோடு நின்று போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.