பஜ்ரங் தளத்திற்கு தடை?: மத்திய அமைச்சரவை இன்று முடிவு
டெல்லி: சிமி அமைப்புக்கு தடை விதித்துள்ளதைப் போல பஜ்ரங் தளத்திற்கும் தடை விதிப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று முடிவு எடுக்கவுள்ளது.
ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை இன்னும் நின்றபாடில்லை. வி.எச்.பி. துறவி ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறை இன்னும் தலை விரித்தாடுகிறது. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்தவர்களின் சர்ச்சுகள், வீடுகள், பிரார்த்தனைக் கூடங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல கர்நாடகத்திலும் கிறிஸ்தவர்களின் சர்ச்சுகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த இரு சம்பவங்களையும் மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டது. இதுகுறித்து விசாரிக்க கர்நாடகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சக குழு வந்தது. அதன் ஆய்வில், பஜ்ரங்தளம்தான் இந்த வன்முறைக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிமி அமைப்பைத் தடை செய்தது போல பஜ்ரங் தளத்தையும் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதன் பின்னணியில் இன்று மாலை, பிரதமர் மன்மோகன் சிங்தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுகிறது. பஜ்ரங்தளத்திற்குத் தடை விதிப்பது குறித்து அப்போது முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பஜ்ரங் தளத்திற்கு தடை விதிக்கும் முடிவை மத்திய அமைச்சரவை எடுக்கவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications