தமிழக மின்வாரியத்தை 2 ஆக பிரிக்க முடிவு
சென்னை: தமிழக மின்வாரியத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடும், மின்வெட்டும் மிக மிக மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழில் துறையினரோ உற்பத்திக்குறைவால் பெரும் வேதனையில் உள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை நடந்த இக்கூட்டத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மின் உற்பத்தி, மின் தட்டுப்பாடு, மின் விநியோக சீரமைப்பு குறித்து விவாதிக்க்ப்பட்டது.
அப்போது மின்வாரியத்தைப் பிரிப்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மின் பகிர்மானத்துக்கென்று தனியாக ஒரு கழகம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் மின் வாரியத்தை, மின்சார உற்பத்தி மற்றும் மின்சார விநியோகம் என இரண்டு கழகங்களாக பிரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இப்படிப் பிரிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.