புதுவை திமுக சார்பில் பிரதமருக்கு 5000 தந்திகள்
புதுச்சேரி: இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புதுச்சேரி மாநில திமுக சார்பில் 5,000 தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் உக்கிரமான போர் நடந்து வருகிறது. இதில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். லட்சக் கணக்கான தமிழர்கள் வீடின்றி உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். பாதுகாப்பற்ற சூழலில் திக்கற்றுள்ளனர். இதனை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா தலையிட வேண்டும் என்று பிரதமரை தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார்.
மேலும் பிரதமருக்கு லட்சக்கணக்கான தந்திகள் அனுப்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திமுகவினர் கடந்த இரு தினங்களாக ஆயிரக்கணக்கான தந்திகளை அனுப்பி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து புதுவை திமுக அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் தந்திகளை பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோன்று விடுதலை வேங்கை, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் சார்பில் தலா 100 தந்திகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications