அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட யு.எஸ் கிளம்பினார் பிரணாப்
டெல்லி: அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று வாஷிங்டன் புறப்பட்டு சென்றார். இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்தம் குறித்த சட்ட மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அதிபர் புஷ் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து வெளியுறவு அமைச்சர் ரைஸ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட வேண்டும். சில கால இழுபறிக்கு பின்னர் புஷ் கையெழுத்திட்டதை அடுத்து வரலாற்று சிறப்பு மிக்க அணு ஒப்பந்தத்தில் அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமைச்சர் கண்டலிசா ரைசும் இன்று கையெழுத்திடுகின்றனர்.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 1.30 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. வாஷிங்டனிலுள்ள வெளியுறவு அமைச்சகத்தின் பெஞ்சமின் பிராங்கிளின் அறையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமாகிறது.
இதனிடையே, இந்த ஒப்பந்தம் குறித்தும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரணாப் முகர்ஜியும், கண்டலிசா ரைசும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உடனேயே இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் கடந்த 34 ஆண்டுகளாக சர்வதேச நாடுகள் அணு வர்த்தகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இந்தியா, மீள்கிறது.