இலங்கையில் கடும் போர் - 54 விடுதலைப் புலிகள் பலி
கொழும்பு: கிளிநொச்சி அருகே புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 54 புலிகள் கொல்லப்பட்டனர். 8 ராணுவ வீரர்கள் பலியாயினர். இந்நிலையில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு 6.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது. கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் ராணுவம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. இதனால் தமிழர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
கிளிநொச்சிக்கு ஒரு மைல் தூரத்தில் ராணுவ துருப்புகள் புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே நேற்று நடந்த தாக்குதலில் 54 புலிகளும், ராணுவத் தரப்பில் 8 வீரர்களும் கொல்லப்பட்டனர்.
நேற்று முன்தினம் முல்லைத்தீவு மற்றும் வன்னிக்குளம் பகுதியில் கடும் சண்டை நடந்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்கரா தெரிவித்தார்.
ராணுத்தின் தாக்குதலை முறியடிக்கவும் ஒடுக்கவும் புலிகள் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர. எனினும் போர் உக்கிரநிலையை அடைந்துள்ளது. ராணுவத்தின் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை சமாளிக்க வேண்டியுள்ளது.
இதையடுத்து தனது தற்கொலை படை தாக்குதலை புலிகள் தொடங்கியுள்ளன. கடந்த 6ம் தேதி அனுராதபுரத்தில் புலிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் முன்னாள் ராணுவ தளபதி, அவரது மனைவி உள்பட 29 பேர் பலியாயினர்.
இந்நிலையில் பெண் விடுதலை புலி நடத்திய தற்கொலை தாக்குதலில் அமைச்சர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார். அமைச்சரின் பாதுகாப்பு வீரர் ஒருவர் இதில் பலியானார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ராணுவ நிதி அதிகரிப்பு:
இந்நிலையில் 2009ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அந்நாட்டு அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. ராணுவ அமைச்சக மானிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ராணுவத்துக்கான நிதி 6.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம். ராணுவத்துக்கு ரூ.17,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட் 18 சதவீதமாகும்.