ஈழத் தமிழர் போராட்டத்திற்கு கருணாநிதி ஆதரவு தர வேண்டும்: ராமதாஸ்

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக வரும் 14ம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஈழத் தமிழர்களுக்காக ஓரணியில் திரள வேண்டும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதற்கான நல்ல வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் 14ம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும், முடிவுகளும் முழுமையானதாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த பிரச்சனையில் இந்திய அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்க வேண்டும். அதோடு நில்லாமல் ஒரு காலக்கெடுவுக்குள் அந்த முடிவுகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசை எடுக்கச் செய்ய வேண்டும்.
இலங்கையில் போர் உடனடியாக நிறுத்தப்பட்டு இந்தியாவின் மேற்பார்வையில் அமைதிப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள் உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும்.
சர்வதேச தொண்டு நிறுவனங்களும், இந்திய செஞ்சிலுவை சங்கமும் தமிழர் பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு நிவாரண உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இலங்கை ராணுவத்திற்கு மறைமுகமாக செய்யப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை விடுதலைப் புலிகளிடமும், இலங்கை அரசிடமும் விட்டுவிட வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு இதுவரை கடைபிடித்து வந்த வெளியுறவு கொள்கையில் மாற்றம் தேவை.
இலங்கையில் தமிழர்கள் நடத்தி வரும் விடுதலைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டம், தீவிரவாதம், பயங்கரவாதம் என்று பழிசுமத்தி அவர்களுடைய உரிமை போராட்டத்தை மறுப்பது தவறு.
எனவே ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சார்பில் ஒருமித்த குரல் எழுப்பப்பட வேண்டும்.
இந்த அங்கீகாரத்தின் மூலம் அமையப்போவது தனி நாடா? அல்லது சுயாட்சி உரிமையா? என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும். அதற்கு முதல்வர் கருணாநிதி முழு ஆதரவு அளிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் முழுமையாக ஆதரிக்க வேண்டும். முதல்வர் கருணாநிதி எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவு கொடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications