சென்னை அருகே பயங்கர தீவிபத்து: ரூ.100 கோடி சேதம்
சென்னை: மணலி அருகே தனியாருக்கு சொந்தமான குடோனில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இன்று வரை தீ எரிந்தது.
சென்னை அடுத்த மணலி அருகே ஆண்டார்குப்பத்தில் யுனிவர்சல் லாஜிஸ்டிக்ஸ் என்ற தனியார் குடோன் உள்ளது. விமல்குப்தா என்பவருக்கு சொந்தமான இந்த குடோனை, ஜெரால்டு விஜயகுமார் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
30 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இந்த குடோன் சுங்கத்துறை அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன பொருட்கள், விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆங்கில நாளிதழுக்கு அச்சடிக்க பயன்படும் காகித ரீல்கள் உட்பட பல பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
விஜயதசமி என்பதால் நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. 3 செக்யூரிட்டிகள் மட்டுமே பணியில் இருந்தனர். பிற்பகல் 2.30 மணியளவில் குடோனின் ஜன்னல் வழியாக புகை வருவதை செக்யூரிட்டிகள் பார்த்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மணலி, மணலி புதுநகர் மற்றும் எண்ணூரில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குடோனின் கதவுகள் உள்பக்கமாக பூட்டியிருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
மேலும் கிடங்கினுள் ரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர்.
திருவொற்றியூர், வண்ணாரப் பேட்டை, தண்டையார் பேட்டை, பொன்னேரி, செங்குன்றம், புழல், மாதவரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து 150 வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருவொற்றியூர், கத்திவாக்கம் ஆகிய நகராட்சிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் கொண்டு வரப்பட்டன. இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உள்ளே இருந்த எண்ணெய் பீப்பாய்கள், ரசாயன கலவைகள் வெடித்து சிதறின.
அந்த பகுதியில் இருந்த குடிசைவாசிகள் பயந்து வீடுகளை விட்டு வெளியேறினர். தீயை அணைக்கும் பணி தொடரந்து நடந்து வருகிறது. இந்த தீ விபத்தில் ரூ. 100 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications