சத்து மாத்திரை சாப்பிட்ட சிறுவன் பலி - 16 சிறார்கள் கவலைக்கிடம்
தென்காசி: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் அருகே 9 சத்து மாத்திரைகளை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஒரு மாணவி கவலைக்கிடமாக இருக்கிறார். 15 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கீழப்பாவூர் அருகே உள்ள பூலான்குளம் கிராமத்தில் ஊராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இன்று இங்கு அரசு ஆரம்ப சுகாதாரத்துறை சார்பில் ரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. பின்னர் மாணவ, மாணவியருக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மாத்திரை இனிப்பாக இருக்கிறதே என்று பொன்னு என்கிற முத்தையாவின் மகன் செல்வக்குமார் (10) 9 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளான். இதையடுத்து அவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தான். சிறிது நேரத்தில் செல்வக்குமார் பரிதாபமான முறையில் உயிரிழந்தான்.
இதேபோல மதுபாலா என்கிற மாணவி இன்னொரு மாணவனிடமிருந்து மாத்திரையை வாங்கி சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரைப் போல மேலும் 15 மாணவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து 16 பேரும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மதுபாலாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவ, மாணவியரின் பெற்றோர்களும், ஊர் மக்களும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர்கள் குவிந்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications