தடை செய்தால் மத்திய அரசு தேர்தலில் தோற்கும்: பஜ்ரங் தளம்
டெல்லி: ஒரிசாவில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நடந்த வன்முறைக்கும், பஜ்ரங் தளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்களை தடை செய்தால் மத்திய அரசு வரும் தேர்தல்களில் தோல்வியைத் தழுவும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து பஜ்ரங்தளத்தின் தேசிய அமைப்பாளர் பிரகாஷ் சர்மா கூறுகையில், ஒரிசாவில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதை யொட்டி நடந்த வன்முறையில் 35 ஏழை கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதற்கும், எங்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஊடகங்கள்தான் எங்களை எதிர்மறையாக சித்தரிக்கின்றன.
2006ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நான்டேட் என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கான்பூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் 10 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறியவர்.
பஜ்ரங்தள் இயக்கத்தை தடை செய்வது என்றால் காங்கிரசையும் தடை செய்ய வேண்டும். 1993ம் ஆண்டு சூரத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பிடிபட்டு தற்போது 20 ஆண்டு சிறை தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.
பஜ்ரங்தள் இயக்கத்தை தடை செய்தால் பாதிப்பு மத்திய அரசுக்குத்தான். தடையை எதிர்த்து மக்களிடம் சென்று நீதி கேட்போம். தேர்தல்கள் விரைவில் வர உள்ள நிலையில் மத்திய அரசு தோல்வியை சந்திக்க நேரிடும் என்றார் சர்மா.












Click it and Unblock the Notifications