அமிதாப் விரைவில் குணமடைய பிரதீபா பாட்டீல் வாழ்த்து
அமிதாப் பச்சனுக்கு நேற்று 66வது பிறந்த நாளாகும். அதுதொடர்பான கொண்டாட்டத்தில் தனது குடும்பத்தினருடன் அமிதாப் இருந்தபோது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிறந்த நாளும் அதுவுமாக அமிதாப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும் பெரும் வருத்தமடைந்தனர்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். பூங்கொத்தையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் சார்பில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் மாளிகை இந்த வாழ்த்துச் செய்தியையும், பூங்கொத்தையும் இன்று காலை அமிதாப்புக்கு அனுப்பி வைத்தது.
தற்போது பிரதீபா பாட்டீல் மகாராஷ்டிராவில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன் இன்னும் 2 நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.