டிவி பார்ப்பதில் சண்டை: அண்ணனைக் கொன்ற தம்பி!
செய்துங்கநல்லூர்: டிவி பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக உடன்பிறந்த அண்ணனை அடித்துக் கொன்றான் தம்பி.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ளது முத்தாலங்குறிச்சி. இங்குள்ள காமராஜர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பண்டாரம். இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இதில் மூத்தமகன் முத்துராமன். செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இளைய மகன் சரவணன். பாளையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இன்னோரு மகன் சடகோபன் நெல்லையில் உள்ள போட்டோ கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடுவது உண்டு. நேற்று காலை டிவி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது முத்துராமனுக்கும், சரவணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துராமன் கம்பால் தம்பியை தாக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அரிவாளால் முத்துராமனை விரட்டி சென்று சராமரியாக வெட்டி தள்ளினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த செய்துங்கநல்லுர் இன்ஸ்பெக்டர் அமல்ஸ்டாலின் ஆனந்த் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தார்.