பங்குச் சந்தை: 800 புள்ளிகள் உயர்வு
மும்பை: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை எடுத்த எடுப்பிலேயே 500 புள்ளிகள் உயர்ந்து முன்னேற்றம் காணப்பட்டது.
பிற்பகலுக்குப் பின் மேலும் 300 புள்ளிகள் உயர்ந்தது.
சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் இந்திய பங்குச் சந்தை, கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 1000 புள்ளிகளை (சென்செக்ஸ்) இழந்தது.
இந்த நிலையில், இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 11,028 புள்ளிகளாக ஆனது.
தற்போது இது மேலும் 300 புள்ளிகள் உயர்ந்து 800 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையிலும் நிப்டி குறியீடு 208 புள்ளிகள் உயர்ந்து 3,488 புள்ளிகள் ஆனது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் இன்று நல்ல விலைக்குப் போயின. அந்த வங்கியின் ஸ்திரத் தன்மை குறித்து வங்கித் தலைவர் அளித்த உறுதியைத் தொடர்ந்து 19 சதவிகிதம் கூடுதல் விலைக்கு விற்றன ஐசிஐசிஐ பங்குகள்.
ஆசிய பங்குச் சந்தைகள் மற்றும் ஆஸ்திரேலிய பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏறுமுகம் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்திருப்பதாக பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
சிதம்பரம் உறுதி!
இதனிடையே புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முதலீட்டாளர்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும், பணப் புழக்கத்தை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச பொருளாதார நெருகடிகளால் இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரிய பாதிப்புகள் வராது என்றும் அவர் தெரிவித்தார்.
ரூபாய் மதிப்பு உயர்வு!
கடந்த வெள்ளியன்று மிக மோசமாக வீழ்ச்சியடைந்த ரூபாயின் மதிப்பில் தற்போது ஓரளவு முன்னேற்றம் காணப்படுகிறது. இன்று பிற்பகல் நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா அதிகரித்தது. 48.45 ஆக இருந்த 1 டாலரின் மதிப்பு 48.20 ரூபாயாகக் குறைந்துள்ளது.