For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் குறைந்த காற்றழுத்தம்: நீடிக்கிறது மழை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை சீஸன் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது.

இதன் ஒரு பகுதியாக இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அதன் காரணமாக தமிழகத்தில் கடும் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாகப் பெய்துவரும் இந்த மழை இன்னும் தினங்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. முக்கிய சுரங்கப் பாதைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதித்தது.

நேற்று மாலை சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

தென் மேற்கு பருவ மழையானது முற்றிலுமாக முடிவடைந்த பின்புதான் வட கிழக்குப் பருவமழை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். கேரளாவில் தென் மேற்கு பருவ மழை முழுமையாக நீங்கி, நிலையான மாற்றம் வரவேண்டும். அதன் பின்புதான் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு பருவ மழையானது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வலுவாக இருந்து வருகிறது. இன்னும் முடியவில்லை. எனவே இந்த மழை வட கிழக்குப் பருவமழை அல்ல. தற்போது இலங்கை அருகேயும் அதை அடுத்துள்ள பகுதியிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காணப்படுகிறது.

இதேபோல் அரபி கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இந்த குறைந்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் மேக மூட்டம் காணப்படும் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என்றார் ரமணன்.

தென் மாவட்டங்களில் கடும் மழை...

தென் மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று பலத்த மழை பெய்துள்ளது.

தூத்துக்குடியில் நேற்று இரண்டரை மணிநேரம் பலத்த மழை பெய்த்து. இம்மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று மணியாச்சியில் 90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் திரண்டது. நெல்லா மாவட்டம் முழுவதும் நேற்று நல்ல மழை.

இந்த மழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 117.40 அடி. அணைக்கு வினாடிக்கு 410 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 788 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 2 ஆயிரத்து 159 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

இதே போல் வைகை அணையின் நேற்றைய நீர்மட்டம் 48.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 597 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து 1,542 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் 1,750 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

திருச்சி:

திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழை பெய்து, சிற்றாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்தது.

நெல்லை, தூத்துக்குடியில் மழை:

நெல்லை மற்றும் தூத்துக்குடியிலும் நேற்று முன் தினம் இரவு முதல் மழை கொட்டித் தீர்த்தது.

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, தென்காசி, சிவகிரி அம்பாசமுத்திரம், நாங்குநேரி, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.

தூத்துக்குடியிலும் நேற்று முன்தினம் முதல் பெய்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் நீந்தியவாறே சென்றன. முக்கிய சாலைகளில் வெள்ள நீர் குளம்போல் தேங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றான உப்பு உற்பத்தி மழை காரணமாக அடியோடு முடங்கியுள்ளது. சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான உப்பளங்கள் மழை நீரில் மூழ்கியது. இதிலிருந்து உப்பளங்கள் மீண்டு வர சில நாட்கள் பிடிக்கும் என தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X