அமைச்சர் தாஸ்முன்ஷி தொடர்ந்து கவலைக்கிடம்
டெல்லி: இருதய நோய் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் அன்புமணி கூறினார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி (62) இருதய நோய் பாதிப்பு ஏற்பட்டு நேற்று அதிகாலை டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாக உள்ளது என்று டாக்டர் டி.கே.சர்மா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, நேற்று தாஸ்முன்ஷியை சென்று பார்த்தார். பின்னர் அவர் கூறுகையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்தபோது நாடித்துடிப்பை உணர முடியவில்லை. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது நாடி சரியாக உள்ளது என்றார்.
தாஸ்முன்ஷியின் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு மற்றும் சுவாசம் ஆகியவை சீரடைந்துள்ள போதிலும் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
தாஸ்முன்ஷியின் இருதயத்தில் இருந்து உடலுக்கு ரத்தத்தை பம்பு செய்யும் இடது வென்ட்ரிக் சரியாக செயல்படவில்லை என்றும் இதன் காரணமாக அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு இருப்பதுடன் அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் தாஸ்முன்ஷி இருதய நோயால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாஸ்முன்ஷியை மக்களவை சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் சென்று பார்த்தனர்.












Click it and Unblock the Notifications