திவால் வதந்தி: மும்பை போலீசில் ஐசிஐசிஐ பரபரப்பு புகார்
மும்பை: திவால் வதந்திகள் மூலம் தங்கள் வங்கியின் பங்கு மதிப்பை வீழ்ச்சியடைச் செய்ய முயலும் சில புரோக்கர்களை கண்டுபிடித்து தண்டிக்குமாறு மும்பை போலீசாரிடம் ஐசிஐசிஐ வங்கி திங்கள்கிழமை புகார் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையர் மற்றும் வெளி நபர்களுக்கு ஒரு மர்ம எஸ்எம்எஸ் வந்தது. அதில், ஐசிஐசிஐ வங்கி விரைவில் திவால் ஆகப் போகிறது. இப்போது தனது திவால் அறிவிப்பு குறித்த கடிதத்தை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது. எனவே அந்த வங்கியில் உள்ள உங்கள் கணக்குகளை முடித்துக் கொள்ளுங்கள், என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வதந்தி வேகமாகப் பரவ அடுத்த சில மணி நேரங்களில் மளமளவென ஐசிஐசிஐ பங்குகளின் மதிப்பு சரிந்தது. வெள்ளிக்கிழமை மட்டும் இத்தகைய வதந்திகளால் 19 சதவிகிதம் வரை ஐசிஐசிஐ பங்குகள் விலை சரிந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து வங்கியின் இயக்குநர் கே.வி. காமத் தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் உறுதித் தன்மை குறித்து அறிகத்கை வெளியிட்டு அமைதிப்படுத்தினார்.
இந்த வதந்திகளின் பின்னணி குறித்து வங்கியின் புலானாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில், இது திட்டமிட்ட சதி என கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பை இணைக் கமிஷனர் ராகேஷ் மரியாவிடம் இதுகுறித்து 22 பக்கங்கள் கொண்ட புகார் மனு வங்கியின் இயக்குர் காமத் சார்பில் வழங்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் எஸ்எம்எஸ் சேவை மூலம் 15500 பேர்களுக்கு ஐசிஐசிஐ பற்றி தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர் சிலர் பங்குச் சந்தை தரகர்கள் என தன் புகாரில் ஆதாரத்தோடு தெரிவித்துள்ளது இந்த வங்கி.
ஆனால் இந்தப் புகாரில் எந்த புரோக்கர் பெயரையும் ஐசிஐசிஐ வங்கி குறிப்பிடவில்லை. இருந்தாலும் இதுகுறித்து மும்பை போலீசும், சைபர் கிரைம் பிரிவும் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் என்றும் மும்பை கூடுதல் கமிஷனர் சஞ்சய் சக்சேனா நிருபர்களிடம் தெரிவித்தார்.