எல்லா துறைகளிலும் மத்திய அரசு தோல்வி-அத்வானி
பாஜகவின் விஜய சங்கல்ப யாத்திரையை கேரளாவில் இன்று அத்வானி தொடங்கி வைக்கிறார். கர்நாடக-கேரள எல்லையில் உள்ள காசர்கோட்டில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந் நிலையில் அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தற்போது நாடு பாதுகாப்பற்ற பொருளாதார நிலையில் உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது.
தீவிரவாதம் தலைக்குமேல் போய் கொண்டிருக்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக தீவிரவாதம் உள்ளது.
ஓட்டு வங்கிக்காக சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் கொள்கைகையை இந்த அரசு கடைபிடித்து வருகிறது. தீவிரவாதத்தால் நாடு குழப்பான சூழலில் சிக்கியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டது.
அணு ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் அணு தொடர்பான உரிமைகளை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டனர்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த ஆட்சிகாலத்தில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சாலை திட்டங்கள், தகவல் தொழில்நுட்பம், கிசான் கடன் அட்டைகள் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினோம்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த அரசுக்கு இடதுசாரிகள் எப்படி ஆதரவளித்தனர் என்றே புரியவில்லை. இந்த கூட்டணியால் நாடு வீணாகிவிட்டது. 1.5 கோடி வங்கதேசத்தினர் ஊடுருவியுள்ளனர். இதற்கு இந்த கூட்டணியைதான் குறைகூற முடியும்.
நாங்கள் ஆட்சி பீடத்தில் ஏறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடதுசாரிகள் இருந்தனர். கடந்த சில மாதங்களாக மூன்றாவது அணியை உருவாக்குவதில் இறங்கியுள்ளனர்.
கட்டாய மதமாற்றத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் அத்வானி.