1000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஜெட் ஏர்வேஸ்!
மும்பை: தனியார் துறையின் மிகப் பெரிய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தொடர் நஷ்டத்தைத் தாங்க முடியாமல் தனது செலவைக் குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தனது விமான சேவை ஊழியர்கள், வாடிக்கையர் சேவை மைய அலுவலர்கள் மற்றும் இதர தற்காலிக பணியாளர்கள் 1,000 பேரை வேலை நீக்கம் செய்துள்ளது ஜெட் ஏர்வேஸ். இதில் 800 பேர் விமானப் பணிப் பெண்கள் மற்றும் ஆண் விமான சிப்பந்திகள் ஆவர். மற்ற 200 பேர் பொறியாளர்கள் ஆவர்.
விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனத்துடன் நேற்று நடந்த 'புதிய கூட்டணி' ஒப்பந்தத்துக்குப் பிறகு ஜெட் எடுத்துள்ள அதிரடி முடிவு இது.
பணி நீக்கம் குறித்து முறையான அறிவிப்புக் கடிதங்களையும் ஜெட் நிர்வாகம் நேற்றே கொடுத்துவிட்டது.
ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங்பிஷர் விமான நிறுவனங்கள்தான் இன்று உள்நாட்டு விமான சேவையில் 60 சதவிகித விமானங்களை இயக்கி வருகின்றன.
இந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து விமானங்கள் மற்றும் பணியாளர் பரிவர்த்தனை மூலம் மேம்பட்ட சேவையைத் தரத் திட்டமிட்டுள்ளன. மேலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதிலும் தீவிரம் காட்டுகின்றன.
அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது 1,000 பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அடுத்து நஷ்டம் வரும் வழித் தடங்களில் இயக்கப்படும் விமானங்களும் நிறுத்தப்படுகின்றன.
மேலும் சில ஆயிரம் பேரும் நீக்கம்:
இதற்கிடைய மேலும் சில ஆயிரம் ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
நிறுவனத்தை நடத்தும் செலவு 30 சதவீதம் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் செலவைக் குறைக்கும் வகையில் பணி நீக்கம் செய்வதை தவிர்க்க முடியாது என்றும் ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக விமான பணிப் பெண்களும், சிப்பந்திகளும் நீக்கப்பட்ட நிலையி்ல் அடுத்த கட்டமாக பிற பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் நீக்கப்படுவர் என்றார்.
கிங்பிஷ்ஷரிலும் பணி நீக்கம்:
அதே போல தனது நிறுவனத்திலும் சில நூறு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கிங் பிஷ்ஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையா அறிவித்துள்ளார்.
மேலும் போயிங்கிடம் ஆர்டர் தரப்பட்ட 14 விமானங்களை வாங்கப் போவதில்லை என்றும், அதைத் திருப்பித் தரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
ரூ. 5000 கோடி கோரும் விமான நிறுவனங்கள்:
இதற்கிடையே நஷ்டத்திலிருந்து தப்பிக்க தங்களுக்கு ரூ. 5,000 கோடியை தந்து உதவ வேண்டும் என மத்திய அரசுக்கு கிங் பிஷ்ஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த உதவியை வழங்கலாம் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பிரபுல் படேல் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் பணத்தை எடுத்து இந்த தனியார் நிறுவனங்களுக்குத் தர அரசு முன் வருமா என்று தெரியவில்லை.