இலங்கை தமிழர்களுக்காக ராஜினாமா-காங் ஆதரவு
சென்னை: இலங்கை விவகாரத்தில் 2 வாரத்துக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்ற அனைத்து கட்சி தீர்மானத்தை நாங்களும் ஆதரிக்கிறோம் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இலங்கை தமிழர்கள் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கிறோம். அதற்காகத்தான் இந்த முக்கிய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அங்கமாக நாங்களும், முதல்வர் கருணாநிதியும் இருக்கிறோம். இந்த விஷயத்தில் எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கிறோம்.
முதல்கட்டமாக, 2 வாரத்துக்குள் முடிவை சொல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதன்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி நாங்கள் முடிவு செய்வோம் என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், இந்த கூட்டத்தின் முடிவில் தீர்மானம் கொண்டு வருவதை விட வரைவு தீர்மானத்தை முதலில் சொல்லிவிட்டால் அதை வைத்து விவாதிக்கலாம் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்று வரைவு தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி முதலிலேயே வாசித்தார்.
அதன்பிறகு விவாதம் நடத்தப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முன்பு சட்டமன்றத்திலும், இதுபோன்ற கூட்டங்களிலும் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் போல் இது இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினோம். தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில், இலங்கையில் தமிழகர்கள் மீதான ராணுவ தாக்குதலை நிறுத்த வேண்டும், இலங்கை அரசுக்கு வழங்கும் ஆயுத உதவியை இந்தியா நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசு உதவ வேண்டும், ரெட்கிராஸ் போன்ற தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அங்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தினோம். அனைத்துக் கட்சித் தீர்மானத்தை ஆதரிக்கிறோம் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறுகையில், முன் எப்போதும் இல்லாத பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் கூட்டம் நடந்தது. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.