உத்தபுரத்தில் மார்க்சிஸ்ட் எம்எல்ஏக்கள் விசாரணை
மதுரை: உத்தப்புரத்தில் காவல் துறையால் பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் நேரில் விசாரணை நடத்தினர்.
மதுரை மாவட்டம உத்தபுரத்தில் தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு இரு சமூகத்தினருக்கு இடையே தொடர் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சிபிஎம் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பாலபாரதி தலைமையில் எம்எல்ஏக்கள் நன்மாறன், லதா, ஜான் ஜோசப் அடங்கியோர் கொண்ட குழு உத்தப்புரத்திற்கு சென்றது.
உத்தப்புரத்தில் காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படும் தலித் மக்களையும், சேதமடைந்த வீடுகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் பாலபாரதி, நன்மாறன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை அகற்றிய தமிழக முதல்வரின் நடவடிக்கை பாராட்டக் கூடியது. இந்த ஊரில் தலித் மக்கள் சாதி கொடுமையால் பரிதவித்து வருகின்றனர்.
இங்கு 75க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தை பிறந்து மூன்று நாட்களே ஆன பெண்ணை கைக் குழந்தையுடன் இழுத்துச் சென்று காவல் துறை வண்டியில் ஏற்றியுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கதக்கது.
காவல் துறையின் தாக்குதலில் அப்பாவி பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலித் மக்கள் மீது நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆனால் மதுரை மாவட்ட ஆட்சியர் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை வந்து பார்க்கவும் இல்லை. அவர்களுக்கு நீதி வழங்க போதிய அக்கரையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினர்.












Click it and Unblock the Notifications