For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதரவு வாபஸ் தந்தி போதும்: திருநாவுக்கரசர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடாவிட்டால் திமுகவும், கூட்டணி கட்சிகளும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் என்று ஒரு தந்தி அனுப்பினாலே போதும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடல் முழுவதும் தந்தி அடிக்க ஆரம்பித்து விடும் என்று பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், இந்த பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வலியுறுத்தியும் சென்னையில் மாநில பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருநாவுக்கரசர் பேசியதாவது:

புலிகள் ஒழிப்பு என்ற பெயரில் இலங்கை சிங்கள ராணுவம் தமிழ் இனத்தையே அழித்து வருகிறது. இதற்கு மத்திய அரசும் துணை நிற்கிறது.

உலகத் தமிழர்களுக்காக ஆட்சி செய்வதாக கூறும் கருணாநிதி, அண்டை நாட்டில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசை அனுசரித்து போகிறார்.

இலங்கை மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளிலும் தமிழர்கள் பாதிக்கப்படுவதை பற்றி அவர் கவலைப்படவில்லை.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவருக்கு நேரமோ, ஆர்வமோ, அக்கறையோ இல்லை. இலங்கை தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழக மக்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு அளித்து வரும் ராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த செய்ய வேண்டும். மீண்டும் போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசை வற்புறுத்தி பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

இந்த பிரச்சனையில் பிரதமருக்கு லட்சக்கணக்கான தந்தி அனுப்புவதில் எந்த பயனும் இல்லை.

உடனடியாக இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிடாவிட்டால் திமுகவும், கூட்டணி கட்சிகளும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் என்று ஒரு தந்தி அனுப்பினாலே போதும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடல் முழுவதும் தந்தி அடிக்க ஆரம்பித்து விடும்.

இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட 14 நாட்கள் அவகாசம் தேவையில்லை. 14 நிமிடங்களில் மத்திய அரசில் முதல்வர் கருணாநிதியால் எதையும் சாதிக்க முடியும். இதற்கான முயற்சிகளை அவர் உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசை நிர்பந்திக்கும் வகையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.

எனினும், வரும் மார்ச் மாதத்தில் எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இப்போது ராஜினாமா செய்வதாகக் கூறுவது பிரச்சனைக்கு தீர்வாகாது.

இலங்கை பிரச்சனைக்கு உண்மையிலேயே தீர்வு காண வேண்டும் என்று கருணாநிதி கருதினால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்தால், பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்றார்.

ஆர்பாட்டத்தைத் தொடர்ந்து பின்னர் பாஜக தலைவர்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X