இலங்கை விவகாரம்-பிரதமருடன் பாலு சந்திப்பு
டெல்லி: இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இலங்கையில் 14 நாட்களுக்குள் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யாவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வர் என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து முதல் ஆளாக திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
இந் நிலையில் தமிழகத்தின் நிலையை பிரதமரிடம் தெளிவாக விளக்க அவரை நேரில் சந்தித்தார் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பாலு.
பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து 30 நிமிடம் பேசிய அவர், ராஜினாமா அறிவிப்பு என்பது வெறும் மிரட்டல் அல்ல என்றும், மத்திய அரசு இலங்கையில் போரை நிறுத்தத் தவறினால், ஆயுத உதவியை நிறுத்த மறுத்தால் அனைத்து எம்பிக்களும் ராஜினாமா செய்வது உறுதி என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் கடிதத்தையும் அவர் பிரதமரிடம் அளித்தார்.
இந்தச் சந்திப்பின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் உடனிருந்தனர்.
சந்திப்புக்குப் பிறகு, நிருபர்களிடம் பேசிய பாலு, இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் மீது நடக்கும் தாக்குதல் பற்றி பிரதமரிடம் விளக்கிக் கூறினேன். இத்தாக்குதல்களை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழின பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண, இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்தினேன் என்றார்.