தீபாவளி பண்டிகை-1000 சிறப்பு பஸ்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ரயில் மற்றும் பஸ்களில் முன் பதிவு செய்ய கடைசி நேர நெரிசலில் தவித்து வருகிறார்கள். அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டது.
தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், கோவை, திருவனந்தபுரம் உள்பட பல பகுதிகளுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களிலும் முன் பதிவு முடிந்துவிட்டது.
தனியார் ஆம்னி பஸ்களிலும் முன் பதிவு முடிந்து இடமில்லாத நிலை நிலவுகிறது. தீபாவளிக்கு முன்னதாக 24, 25, 26, ஆகிய தேதிகளில் எல்லா ஆம்னி பஸ்களிலும் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன.
இந் நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலம் 1,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் சட்டநாதன் கூறுகையில்,
மக்கள் வசதிக்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மற்ற போக்குவரத்து கழகங்களிடம் இருந்து பஸ்கள் பெறப்பட்டு நீண்ட தூர பகுதிகளுக்கு இயக்கப்படும்.
சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, தஞ்சாவூர் கும்பகோணம் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன் பதிவு நடந்து வருகிறது. சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு பஸ்கள் 24ம் தேதி முதல் இயக்கப்படும் என்றார்.
அதே போல பிற ஊர்களில் இருந்தும் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.