தமிழகம் முழுவதும் 2100 தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து!
சென்னை: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி தமிழ் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில் 19ம் தேதி பேரணி நடக்கிறது.
இப்பேரணியையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் 19ம் தேதி காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
இலங்கை தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை சிங்கள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும், இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி ராமேஸ்வரத்தில் தமிழ் திரையுலகினர் திரண்டு பேரணி, பொதுக் கூட்டம் நடத்துகின்றனர்.
இதில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் என திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி 18, 19, 20 ஆகிய 3 நாட்கள் திரையுலகம் சம்பந்தமான அனைத்து பணிகளும் ரத்து செய்யப்படுகிறது. போராட்டம் நடக்கும் 19ம் தேதி தியேட்டர்களும் மூடப்படும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
19ம் தேதி பேரணியில் திரை அரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர்களும் கலந்து கொள்கின்றனர். அதையட்டி அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,100 தியேட்டர்களில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications