பெண் சித்ரவதை-சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
சென்னை: தன்னை திருமணம் செய்ய மறுத்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சாப்ட்வேர் இன்ஜினீயரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை குரோம்பேட்டை ராதா நகரைச் சேர்ந்த ராமன்-வசந்தி தம்பதியின் மகள் திவ்யா (21). போரூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதே நிறுவனத்தில் பம்மலைச் சேர்ந்த முரளிதரன் (27) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.
இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், முரளிதரனை திருமணம் செய்ய திவ்யா மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முரளிதரன் நேற்று காலை 9 மணிக்கு திவ்யாவின் வீட்டுக்கு சென்றார். வீட்டில் தனியே இருந்த திவ்யாவை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியுள்ளார். திவ்யா மீண்டும் மறுக்கவே வீட்டை உள்புறமாக தாழிட்டுவிட்டு திவ்யாவை கண் மூடித்தனமாகத் தாக்கியுள்ளார்.
மாலை 5.30 மணி வரை திவ்யாவை அடைத்து வைத்து முரளிதரன் சித்ரவதை செய்துள்ளார்.
பணிக்குச் சென்ற பெற்றோர் மாலையில் வீடு திரும்ப இருந்த நிலையில் முரளிதரன் அங்கிருந்து வெளியேறிவிட்டார். பெற்றோர் வந்து பார்த்தபோது திவ்யா உடல் முழுவதும் காயங்களுடன் இருந்தார்.
இதையடுத்து திவ்யாவை தனியார் மருத்துவமனைக்கு வசந்தி அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.
பின்னர் திவ்யா போலீஸில் புகார் செய்தார். அதில், முரளிதரனுடன் தான் நட்பாகவே பழகியதாகவும் ஆனால் அவர் தவறாக புரிந்து கொண்டதாகவும், தன்னை வீட்டில் 8 மணி நேரம் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து முரளிதரனை கைது செய்தனர்.