சிதம்பரம்- சிவாச்சாரியாரை தாக்கிய தீட்சிதருக்கு சிறை
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த தீட்சிதரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவனடியார் ஆறுமுகசாமி தேவாரம் பாடியது தொடர்பாக சிவாச்சாரியார்களுக்கும் தீட்சிதர்களுக்கும் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
அனுமதி பெற்று சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாம் என்று அரசு உத்தரவிட்டது.
சில மாதங்களுக்கு முன்பு சிவனடியார் ஆறுமுகசாமி தேவாரம் பாடியபோது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதில் சிலர் அவரை தாக்கினர். இதில் படுகாயமடைந் ஆறுமுகசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக்கு ஆஜராகும்படி தீட்சிதர் மணிகண்டனுக்கு நீதிமன்றம் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்தார்.
இதனால் தீட்சிதர் மணிகண்டனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து சிதம்பரம் போலீசார் தீட்சிதர் மணிகண்டனை கைது செய்து சிதம்பரம் இரண்டாவது நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, மணிகண்டனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இது தீட்சிதர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.