காஞ்சி நெசவாளர்களைச் சந்தித்து குறைகேட்டார் விஜயகாந்த்
காஞ்சிபுரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு திடீரென்று சென்றார். விசைத் தறி நெசவாளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். விதி முறைகளை மீறி மணல் அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் நேரில் கேட்டறிந்தார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டை கிராமத்திற்கு நேற்று காலை சென்றார். அங்கு வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்களைச் சந்தித்தார். தொடர் மின்வெட்டு காரணமாக விசைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.
தினமும் ஆறரை மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதால் தொழில் செய்ய முடியவில்லை என்றும், இதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் நெசவாளர்கள் விஜயகாந்திடம் கூறினர்.
பின்னர் பாலூர் என்ற கிராமத்திற்குச் சென்று அங்கிருக்கும் மணல் குவாரிகளைச் சென்று பார்த்தார். விதிமுறைகளை மீறி இங்கு மணல் அள்ளப்படுவதாகவும், இதனால் தங்களுக்கு மிகுந்த பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விஜயகாந்திடம் கூறினார்கள்.
இந்த விவரங்களை கேட்டறிந்து கொண்ட விஜயகாந்த், பின்னர் அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய அலுவலகம் சென்று பொதுமக்களுக்கு செய்யப்படும் மின் சப்ளை குறித்து கேட்டறிந்தார்.
நாளை சென்னையில் தேமுதிகவின் இளைஞரணி மாநாடு நடக்க உள்ளது. மின் வெட்டு, விலைவாசி, ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து விஜயகாந்த் திமுக அரசையும், மத்திய அரசு குறித்தும் கடுமையாக விமர்சிக்க உள்ளார்.
நெசவை பெரிதும் நம்பியுள்ள காஞ்சிபுர நகரின் நெசவாளர்கள் மின்வெட்டு காரணமாக சந்தித்து வரும் இழப்பு குறித்து இந்த மாநாட்டில் பேச வசதியாக கேப்டன் செய்த 'பீல்ட் ஒர்க்' இது என்கிறார்கள் அவரது கட்சிக்காரர்கள்.