இலங்கை தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
டெல்லி: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான சிங்கள ராணுவத் தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும் என இலங்கைத் தூதர் சி.ஆர். ஜெயசிங்காவை நேரில் அழைத்து இந்தியா மீண்டும் எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், இலங்கை துணைத் தூதர் பலித கொணகுடாவை நேரில் அழைத்து இந்தியாவின் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் டெல்லியில் உள்ள இலங்கை தூதர் சி.ஆர்.ஜெயசிங்கேயை நேற்று நேரில் அழைத்துப் பேசினார்.
அப்போது இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை இலங்கை அரசு மதித்து நடக்க வேண்டும், தாக்குதல்களில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இனப் பிரச்சினைக்கு ராணுவரீதியில் தீர்வு காண முயற்சிக்காமல், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும்,
இரு நாடுகளுக்கும் பொதுவான கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் தாக்கப்படுவதையும், கொல்லப்படுவதையும் இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இலங்கை அமைச்சருடன் இந்திய தூதர் பேச்சு:
அதே போல இலங்கைக்கான இந்தியத் தூதரும் அந் நாட்டு வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications