சென்னையை உலுக்கிய தேமுதிகவின் பிரமாண்ட பேரணி

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்த இப் பேரணியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து இந்தப் பேரணி புறப்பட்டது. இதில் தேமுதிக இளைஞர் அணியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மஞ்சள் சட்டை, மஞ்சள் புடவை சீருடை அணிந்து அணிவகுத்து சென்றனர்.
பேரணியை இளைஞர் அணி மாநிலச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தொடங்கி வைத்து தலைமை தாங்கி நடத்திச் சென்றார். பேரணி வாலாஜா சாலை, அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக தீவுத் திடலைச் சென்றடைகிறது.
மன்றோ சிலை அருகில் விஜயகாந்த் பேரணியை பார்வையிட்டார். இதற்காக பிரமண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
பேரணியில் கிராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், வீர விளையாட்டுக்களும் இடம் பெற்றன. ஒட்டகங்களிலும், குதிரைகளிலும் இளைஞர் அணியினர் அணிவகுத்து சென்றனர்.
மாநாட்டு மேடையின் ஒரு புறம் நாடாளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு புறத்தில் சட்டசபை வடிவ கட்அவுட் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெனரேட்டர்கள்-10 லட்சம் தண்ணீர் பாக்கெட்:
மின்சார வெட்டை சமாளிக்க தீவுத்திடலில் 10க்கும் மேற்பட்ட ராட்சத ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. தொண்டர்களுக்கு வழங்குவதற்காக 10 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகள் வரவழைக்கப்பட்டன.
மாநாட்டில் பங்கேற்க பஸ், கார், வேன், லாரிகளில் தொண்டர்கள் குவிந்துவிட்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த மெரீனா கடற்கரை மற்றும் புறநகர் பகுதிகளில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
உணவு மண்டபங்கள்:
வெளியூர்களில் இருந்து வருபவர்கள் உணவருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக உணவு மண்டபங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
வெளியூரில் இருந்து வந்த தொண்டர்கள் இன்று காலையிலேயே தீவுத் திடலில் குவிந்து விட்டனர். மெரீனா கடற்கரை முழுவதும் மஞ்சள் சட்டை அணிந்த தேமுதிகவினரே தென்பட்டனர்.
ஆம்புலன்ஸ்கள்-டாக்டர்கள்:
சென்னை முழுவதும் தேமுதிக கொடிகள், தோரணங்கள்மயம்தான்.
25 ஆம்புலன்சுகள், டாக்டர் குழுவினரும் நகரின் பல பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை பலத்த மழை கொட்டிய நிலையிலும் பேரணி நடந்தது.
மாநாடு நடைபெறும் தீவுத்திடல் நுழைவு வாயிலுக்கு எம்.ஜி.ஆர் பெயரும், மாநாட்டு மேடைக்கு அறிஞர் அண்ணாவின் பெயரும் சூட்டப்பட்டிருந்தது.
இதற்கிடையே பேரணிக்கு வரும் தொண்டர்களை வரவேற்று கட்சி தலைவர் விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
''நாளை நமதே, நாற்பதும் நமதே'':
''நாளை நமதே, நாற்பதும் நமதே'' என்ற தலைப்பிலான அந்தக் கடிதத்தில்,
நான் அழைத்தால் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம்போல் வருவீர்கள் என எனக்கு தெரியும். அதே நேரத்தில் நம்மிடம் பணம் இல்லை என்பதை மாற்றார்கள் பலகீனமாக கருதுகின்றனர்.
பணத்தையே முழுக்க, முழுக்க நம்பியுள்ள ஊழல் கட்சிகளின் ஆதிக்கத்தை ஒழித்து கட்ட நமக்கு வெள்ளி தோட்டாக்கள் தேவை என்பதை அறிவீர்கள். எனவே, நம் நலம் நாடுவோர் அனைவரிடமும் அவர்கள் மனம் விரும்பி தரும் சிறு நன்கொடைகளைக் கூட சிந்தாமல் சிதறாமல் பெற்று மாநாட்டின் போது பெரிய தொகை வழங்க முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
போலீஸ் ஒத்துழைப்பு இல்லை:
இந் நிலையில் தேமுதிக மாநில இளைஞர் அணிச் செயலாளர் சுதீஷ் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
மாநாடு மற்றும் பேரணியில் கலந்து கொள்வதற்காக 20 லட்சம் பேர் சென்னையில் திரண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து 56 ஆயிரம் வாகனங்களில் தொண்டர்கள் குவிந்துவிட்டனர். அந்தமானில் இருந்து ஒரு கப்பலில் 750 பேர் வந்தனர்.
மாநாட்டு திடல் வாசலில் ஏராளமான போலீசார் நின்று கொண்டு மாநாட்டிற்கு வரும் கட்சி பிரமுகர்களை உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர். பாதுகாப்பு என்ற பெயரில் போலீசார் அதிகமாக கெடுபிடி செய்தனர்.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை விழுப்புரத்திலும் ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்களை வேலூரிலும் போலீசார் தடுத்து நிறுத்தி மாநாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தனர்.
இதேபோல கிழக்கு கடற்கரை சாலையிலும் அக்கறை என்ற இடத்தில் தேமுதிகவினர் வந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி வேறு பாதையில் அனுப்பி அலைக்கழித்திருக்கிறார்கள்.
போலீஸ் ஒத்துழைப்பு சுத்தமாக இல்லை. எங்கள் தலைவர் விஜயகாந்த் சொன்னது போல் காவல்துறை திமுக போலீஸ் ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பல இடங்களில் விஜயகாந்த்தின் தட்டி போர்டுகள், பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தத் தடைகள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, என்றார்.












Click it and Unblock the Notifications