பங்குச் சந்தை வீழ்ச்சி: அம்பானிகளின் சொத்து மதிப்பில் கடும் சரிவு!
மும்பை: இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் உள்ள முகேஷ், அனில் அம்பானிகளின் நிகர சொத்து மதிப்பில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவால் அனில் அம்பானியின் நிறுவனங்களில் அவருக்குள்ள பங்குகளின் மதிப்பு 4,510 கோடி டாலரிலிருந்து 70 சதவீதம் சரிவடைந்து 1,290 கோடி டாலராக குறைந்துள்ளது.
நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் நாட்டின் மிகப் பெரிய பணக்காரராக திகழும் முகேஷ் அம்பானி, அவரது நிறுவனங்களில் கொண்டுள்ள பங்குகளின் சந்தை மதிப்பு 54 சதவீதம் குறைந்து 2,200 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
மொத்தத்தில் அம்பானி சகோதரர்களின் நிகர சொத்து மதிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகள்தான் இந்த முறை கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இத்துறையில் முன்னிலை வகிக்கும் டீ.எல்.எஃப். நிறுவனத்தின் நிறுவனர் கே.பி.சிங்கின் நிகர சொத்து மதிப்பு 75 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனையும் தாண்டி யூனிடெக் நிறுவனத்தின் நிறுவனர் ரமேஷ் சந்திரா, அவரது நிறுவனத்தில் கொண்டுள்ள பங்குகளின் சந்தை மதிப்பு 85 சதவீதம் குறைந்துள்ளது.
பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வரும் டாட்டா குழுமத்தின் நிறுவனர் ரத்தன் டாட்டாவின் நிகர சொத்து மதிப்பு 55.6 சதவீதம் குறைந்துள்ளது.