'பளிச்' திருச்செந்தூர் கடற்கரை!
கந்த சஷ்டிக்காக தூய்மையாகும் திருச்செந்தூர் கடற்கரை! திருச்செந்தூர் பக்தர்களின் நீண்டநாள் வேண்டுகோள் மற்றும் கந்தர் கஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரை தூய்மைபடுத்தப்பட்டு வருகிறது.
கடலோரத்தில் முருகபெருமான் கோவில் அமைந்துள்ள திருச்செந்தூர் பக்தர்களின் சுற்றுலா தலமாகவும் உள்ளது. முருக பெருமானை தரிசனம் செய்யும் பக்தர்கள் கடற்கரையில் நீராடி மகிழ்வது வழக்கம்.
ஆனால் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் புழுதி உண்ணி அதிகம் உள்ளது. இதனால் கடற்கரையில் அமரும் பக்தர்களுக்கு உண்ணி கடித்து அலர்ஜி ஏற்பட்டு கால்கள் பெரிதாகி விடும். இதனால் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் உள்ள புழுதி உண்ணிகளை அகற்ற நீண்ட நாட்களாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதேபோல் கடற்கரையின் கடைசி பகுதியில் சுகாதார கேட்டினால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். இதுகுறித்தும் பக்தர்கள் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் வரும் 29ம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கடற்கரையில் அமர்வதற்கு வசதியாக கோவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. ஜேசிபி இயந்திரம் மூலம் கடற்கரையில் உள்ள மணல் சமப்படுத்தப்பட்டது. சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.