மணிப்பூர் முதல்வர் வீடு அருகே குண்டு வெடிப்பு
இம்பால்: மணிப்பூர் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் வீடு அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
நேற்றிரவு 8.30 மணியளவில் மணிப்பூர் முதல்வர் ஓக்ராம் வீடு அருகே உள்ள சாலை சந்திப்பில் பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இது சீன கையெறி குண்டு என்று சந்தேகிக்கிறோம். தாக்குலுக்கு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நகர் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து விடுவோம். முதல்வரை கொல்வதற்கான சதியாக இருக்கலாம். கடந்த செப்டம்பர் முதல் தேதி இரவு முதல்வர் வீடு மீது குண்டு வீசப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் இது இரண்டாவது தாக்கதல் என்று தெரிவித்தனர்.
வடகிழக்கு பகுதிகளுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் அவர் உள்ளார். ஏற்கனவே அவருக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. தற்போது இபோபி சிங் வீட்டுக்கு அருகில் தாக்குதல் நடந்ததை அடுத்தது பிரதீபாவுக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications