எல்டிடிஈ தீவிரவாத அமைப்பல்ல-ராமதாஸ்
டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது
இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு நேரடியாக உடனே தலையிட வேண்டும்.
இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று கூறி மத்திய அரசு தட்டிக்கழித்து விடக்கூடாது. கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு வங்காள தேசத்தை உருவாக்கியதை நினைவில் கொள்ள வேண்டும்.
திபெத் பிரச்சினையில் சீனாவுக்கு இந்தியா பயப்படவில்லை. தலாய் லாமாவுக்கு இன்றும் மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறது.
இலங்கை தமிழர்களின் உரிமைக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் போராடி வருகிறது. தமிழ் ஈழம் அமைவதை யாரும் தடுத்து நிறுத்தி விட முடியாது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல. தமிழர்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்.
இலங்கை ராணுவத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுத்து வரும் ஆயுத உதவிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
அக்டோபர் 29-ந் தேதிக்குள் இலங்கை பிரச்சினையை இந்தியா தீர்க்காவிட்டால் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்வது என்ற அனைத்து கட்சி தீர்மானத்தை ஏற்கிறேன்.
எங்கள் முதல்வர் கருணாநிதி இலங்கை பிரச்சினையை ஒரு முக்கியமான பிரச்சினையாக எடுத்து செயல்படுகிறார். தனது கட்சி எம்பிக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அவர் அனுப்பினால் நாங்களும் அதை பின்பற்றுவோம்.
பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசு விரும்பவில்லை. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் விருப்பத்துக்கு எதிராக இலங்கை அரசு செயல்படுகிறது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கச்சத்தீவையும் இலங்கையிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்றார்.
இலங்கை தமிழர் பிரச்சினை, திமுக-பாமக இடையே மீண்டும் ஒற்றுமையை கொண்டு வருமா? என்று ஒரு நிருபர் கேட்டதற்கு பதிலளித்த ராமதாஸ், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மட்டுமே ஒற்றுமை என்று பதிலளித்தார்.