மின்வெட்டு: அரசு கின்னஸ் சாதனை- ஜெயலலிதா

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மின் வினியோக கட்டுப்பாட்டு முறை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்' அமைந்துள்ளது.
தமிழகத்தின் தற்போதைய மின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காக, மின் வினியோக கட்டுப்பாடு முறை கொண்டு வரப்பட்டிருப்பதாக தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால், அதில் உள்ள கட்டுப்பாட்டு முறைகள், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை பெருமளவு அதிகரித்துள்ளதே தவிர குறைத்துள்ளதாக தெரியவில்லை.
6 மணி நேரம் மின்சார வெட்டு என்று அறிவித்தபோதே, நடைமுறையில் கிட்டத்தட்ட 20 மணி நேரம் அளவுக்கு மின்சார வெட்டு இருந்தது. தற்போது 10 மணி நேரம் என்று அறிவித்ததன் மூலம், இனி மின்சாரமே வராது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஏற்கெனவே நிலவும் மின்சார வெட்டின் காரணமாக வேலை இழப்பு, ஊதிய இழப்பு என தமிழக மக்கள் அனை வரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், மேலும் மின் வெட்டை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், 50 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.
மேலும் மின்சாரம் பயன்படுத்துவதைக் குறைக்குமாறு கூறியிருப்பது மக்களை கற்காலத்துக்கு அழைத்துச் செல்லும் செயலாகும்.
இது போன்ற அறிவிப்பினால், அனைத்துத் தொழில்களும் முடங்குவதோடு மட்டுமல்லாமல், அனைத்துத் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும்.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விமான போக்குவரத்து நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் என பல தரப்பட்ட நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் இந்தத் தருணத்தில், இது போன்ற அறிவிப்பு அனைத்து பிரிவினரையும் சொல்லொணா வேதனை அடைய வைத்துள்ளது.
இது போன்ற அறிவிப்பின் காரணமாக, இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் கூட தாமதம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
தமிழக அரசின் மின்சாரவெட்டு தொடர்பான அறிவிப்பையடுத்து, புதிதாக தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளும் புகைப்படங்களும் எல்லாமே வெறும் கண்துடைப்பு நாடகம், அது காகித வடிவில் தான் இருக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள்.
மின்வெட்டில் இந்த அரசு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சிக்கலாம்.
மின்சார வினியோகத்தை சரியாக கையாளாத முதல்வர் கருணாநிதி அதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும், சட்டசபையைக் கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications