மக்கள் துரத்தல்..கிணற்றில் விழுந்து திருடன் பலி
சென்னை: பொதுமக்கள் திரண்டு வந்து துரத்தியதால், பதட்டமடைந்து தாறுமாறாக ஓடிய திருடன், கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்.
சென்னை புறநகரான பல்லாவரம் ராஜாஜி நகர் ஆச்சாரி தெருவில் வசித்து வருபவர் சுப்புராயன். நேற்று இரவு 11 மணியளவில் இவரது வீட்டின் சுற்றுச் சுவர் ஏறி மர்ம ஆசாமி ஒருவன் உள்ளே குதித்தான். இதனை சுப்புராயன் பார்த்து விட்டார்.
உடனே திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். பொதுமக்கள் திரண்டு விட்டதால் அரண்டு போன திருடன், அங்கிருந்து ஓடினான். அவனை பொதுமக்கள் விடாமல் துரத்தினர்.
இதனால் திருட்டு நபர் தாறுமாறாக ஓடியதில், அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டான். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்னர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அந்த நபரின் உடலை நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
விசாரணையில் கொள்ளையடிக்க வந்த நபரின் பெயர் ரவிக்குமார் என்பதும், மல்லிகா நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ரவிக்குமார், தனியார் கல்லூரியில் டிரைவராக இருந்துள்ளார். அப்போது டீசல் திருடியதால் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவராம்.