சென்செக்ஸ்-2 நாள் ஏற்றம் இன்று இறங்கியது!
மும்பை: சர்வதேச பங்குச் சந்தைதளில் இன்று ஏற்பட்ட மந்த நிலை காரணமாக சென்செக்ஸ் 513 புள்ளிகள் சரிந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 169 புள்ளிகள் சரிந்தன.
கடந்த இருதினங்களாக நல்ல உயர்வைக் காட்டிய சென்செக்ஸ் இன்று திடீர் வீழ்ச்சியடையக் காரணம் சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் என பங்கு வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆறு மாதங்களுக்கு இதே போன்ற நிலைதான் நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நேர முடிவில் 10169 புள்ளிகளில் சென்செக்ஸ் நிலைபெற்றது. நிப்டி 3065 புள்ளிகளில் நிலைபெற்றது.
வளைகுடா பங்குச் சந்தை வீழ்ச்சி:
இதற்கிடையே சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக இன்று வளைகுடா நாடுகளின் பங்கு வர்த்தகத்தில் கடுமையாக வீழ்ச்சி காணப்பட்டது.
அடுத்த சில தினங்களுக்கு இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டதால் இன்று ஒரே நாளில் குவைத் பங்குச் சந்தையில் குறியீட்டெண்கள் சரிந்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் பங்குச் சந்தை குறியீட்டெண்ணும் தொடர்ந்து சிவப்புக் குறியீடுகளையே காட்டின.
துபாயின் பங்குச் சந்தை கடந்த இரு தினங்களாக உயர்வைக் காட்டியது. இன்று 2 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்தது.
மஸ்கட் சந்தையின் பங்கு வர்த்தகமும் கணிசமாகக் குறைந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததும் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனப்படுகிறது.