ஆள் கடத்தல் வழக்கு: பாஜக எம்.பி. டிஸ்மிஸ்
டெல்லி: கடந்த ஆண்டு மனைவி, மகன் என்ற பெயரில் ஒரு பெண்ணையும், சிறுவனையும் வெளிநாட்டுக்கு மோசடியாக அழைத்துச் செல்ல முயன்று கைதான பாஜக எம்.பி. பாபபாய் கத்தாரா, எம்.பி. பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் தஹோத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாபு பாய் கத்தாரா.
கடந்த ஆண்டு தனது மனைவி, மகன் ஆகியோரது பாஸ்போர்ட்களில் வேறு இருவரை மோசடியாக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்று கைதானார்.
இதுகுறித்து விசாரிக்க கிஷோர் சந்திர தியோ தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பாபு பாய் கத்தாரா குற்றம் புரிந்தது நிருபணமாகியுள்ளதாகவும், எனவே அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரை அறிக்கை நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றை அவை முன்னவரான வெளியுறவு அமைச்சர் பிரணாரப் முகர்ஜி கொண்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், ஒட்டுமொத்த உறுப்பினர்களின் மரியாதையையும் பாபு பாய் கத்தாராவின் செயல் சீர்குலைத்து விட்டது. எனவே அவர் அவையிலிருந்து நீக்கப்படுகிறார் என்று கூறினார்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து பாபு பாய் கத்தாரா உறுப்பினர் பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
2 கர்நாடக பா.ஜ.க எம்.பி.க்கள் ராஜினாமா:
இதற்கிடையே, கர்நாடகத்தை சேர்ந்த பாரதீய ஜனதா எம்.பி.க்கள் 2 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த நம்பிக்ைக தீர்மானம் மீதான வாக்கெடுப்பின்போது, கர்நாடக பா.ஜ.க எம்.பி.க்கள் சாங்கிலியானா, மனோரமா மாதவராஜ், மஞ்சுநாத கன்னூர் ஆகியோர் கட்சி மேலிட உத்தரவுக்கு எதிராக, ஆளுங்கட்சிக்கு சாதகமாக வாக்களித்தனர்.
இதனால் சாங்கிலியானாவின் எம்.பி. பதவியை பறிக்கும்படி சபாநாயகரை பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து விசாரணைக்குப் பின்னர் சமீபத்தில் சாங்கிலியானாவின் எம்.பி. பதவியை பறித்து சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோரமா மாதவராஜ், மஞ்சுநாத கன்னூர் ஆகியோர் திடீரென்று தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இது பற்றி அவர்களிடம் கேட்டதற்கு, கட்சி மேலிடம் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்பதற்கு முன்பாகவே தாங்களாகவே முன்வந்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறினார்கள்.