கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிகிறது
டெல்லி: உலக அளவில் கச்சா எண்ணெயின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. பேரல் ஒன்றுக்கு 64 டாலராகக் குறைந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 147 டாலராக உயர்ந்தது. இது 200 டாலரைத் தொடும் என்ற அச்சம் உலகெங்கும் பரவியது.
ஆனால், யூக வர்த்தகத்தால் இந்த விலையை கூட்டிவிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் திவாலாகிவிட்டதால் கச்சா எண்ணெயின் விலை தானாகவே குறைந்து வருகிறது.
இப்போது பேரல் ஒன்றுக்கு 64 டாலர் என விலை போய்க் கொண்டுள்ளது கச்சா எண்ணெய். இது மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறையாது:
கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை இப்போதைக்குக் குறைக்கப்படாது என பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 61 டாலராகக் குறைந்தால் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைப்பது பற்றி முடிவு செய்யப்படும். அதுவரை பொறுத்திருங்கள்.
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து வருவதால், கச்சா எண்ணெய் விலை குறைவால் ஏற்படும் சாதகமும் பாதகமாகிறது என்றார்.
தியோரா-பிரபுல் படேல் பேச்சு:
இதற்கிடையே எரிபொருளுக்கான தொகையை செலுத்தாமல் மத்திய அரசுக்கு பாக்கி வைத்துள்ள விமான நிறுவனங்களின் விவகாரம் குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, இன்று விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேலுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் ரூ. 2,000 கோடி வரை பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை செலுத்துவதற்கான கால அவகாசமாக 60 நாட்களும் முடிந்துவிட்டன.
இந்த விவகாரத்தில் படேலுக்கும் தியோராவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. விமானங்களுக்கான எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும், பாக்கி தொகையை மெதுவாக வசூல் செய்ய வேண்டும் என படேல் கூறுவதை தியோரா ஏற்க மறுத்து வருகிறார்.
இந் நிலையில் இருவரும் இன்று சந்தித்துப் பேசி பிரச்சனையை சமூகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
முன்னதாக நேற்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயலும் கிங் பிஷ்ஷர் தலைவர் விஜய் மல்லையாவும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து விமானத் துறை சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விளக்கி, மத்திய அரசின் உதவியைக் கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.