சந்த்ராயன் விண்கலத்துடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி

ஏவப்பட்ட 1,102வது வினாடியில் சந்த்ராயன் விண்கலத்தை அதற்கு உரிய பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது பிஎஸ்எல்வி.
சந்த்ராயன் விண்கலம் சிறப்பாக இயங்குவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் அனைத்து தரைக்கட்டுப்பாட்டு மையங்களும் அதன் சிக்னல்களை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நிலாவை அடையும் இந்தியாவின் பயணத்தில் முதல் அடி மிக வெற்றிகரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளித் தளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
இப்போது பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது சந்த்ராயன். நீள்வட்டப் பாதை என்பதால் இந்த விண்கலத்துக்கும் பூமியிலிருந்து இடையிலான குறைந்தபட்ச தூரம் (perigee) 250 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் (apogee) 23,000 கிமீ ஆகவும் இருக்கும்.
இதையடுத்து சந்த்ராயன் விண்கலத்தில் உள்ள சிறிய ராக்கெட்டுகளை இயக்கி அதை பூமியிலிருந்து மேலும் தூரத்துக்கு தள்ளுவர் விஞ்ஞானிகள். இந்த ராக்கெட்டுகள் தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மூலமாக, ரேடியோ சிக்னல்கள் மூலம் இயக்கப்படும்.
ராக்கெட்டுகள் இயங்க இயங்க ஒரு கட்டத்தில் இந்த விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 37,000 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் 73,000 கி.மீயாகவும் அதிகரிக்கும்.
மேலும் ராக்கெட்டுகளை இயக்கி இயக்கி இதன் சுற்றுப்பாதை பூமியிலிருந்து 3,87,000 கி.மீயாக உயர்த்தப்படும். இவையெல்லாம் 11 நாட்களில் நடந்து முடியும்.
அப்போது நிலவின் ஈர்ப்பு விசையால் சந்த்ராயன் ஈர்க்கப்பட்டு அதன் சுற்றுப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும். இதையடுத்து நிலவுக்கும் சந்த்ராயனுக்கும் இடையிலான தூரம் 100 கி.மீயாக குறைக்கப்படும்.
1,380 கிலோ எடையுள்ள சந்த்ராயன்-1 விண்கலம் அடுத்த இரண்டாடுகள் நிலவை 100 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.
18 நாட்களுக்குப் பின், நவம்பர் 8ம் தேதி, நிலவுக்குள் ஒரு துணை வி்ண்கலத்தை சந்த்ராயன் செலுத்தும். அது நம் தேசியக் கொடியை நிலவில் நாட்டும்.












Click it and Unblock the Notifications